காவேரி டெல்டா ஓர் ஐப்பசி மாதம்
மழையில் குளித்த மரங்கள்
காற்றில் தலை (தழை) துவட்டிக்கொள்ளும்.
கடிவாளம் அறுந்த குதிரையாய் மேகங்கள்
காற்றில் பறந்து செல்லும்.
கடந்து செல்லும் மேகங்கள் பிரிவில்
கண்ணீர் வடித்து செல்லும்.
வாய்க்காலும் வரப்பும் மழை நீரில்
சமத்துவம் கொள்ளும்.
ஆற்றினில் வெள்ளம்
கரை புரண்டு செல்லும்.
காற்றின் கடும் வேகத்தில் மரங்கள்
ஓவென்று அரண்டு கத்தும்.
பசி அடங்கிய குழந்தையாய் எங்கும்
பினனர் அமைதி காக்கும்.
மெல்ல பொழுதும் சாயும் …..
தின்று கொளுத்த நண்டுகள் வலைவிட்டேகி
திரிந்து செல்லும்.
காரிருளில் திரியும் நண்டை
நரிகள் விருந்து கொள்ளும்.
நண்டை தின்ற நரியோ செரிக்க
தூரத்தில் உரக்க கத்தும்.
ஊரும் உலகும் உண்டபின்
உறக்கம் கொள்ளும்.
என் தந்தையின் குறட்டை ஒலியில்
தவளைகள் மிரண்டு கத்தும்.
உன்னையும் என்னையும் அண்டிய பிராணிகள்
மூலையில் முடக்கம் கொள்ளும்.
அது ஒரு கார் காலம் … இப்போது எனக்கது கனாக்காலம் நண்பா!